என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோட்டக்குறிச்சி காவிரியில் தொடரும் மணல் திருட்டு
- பள்ளம்தோதோண்டி தடுக்கப்பட்ட பின்பும்தோட்டக்குறிச்சி காவிரியில் தொடரும் மணல் திருட்டு
- சட்டவிரோதமாக மணலை அள்ளி கரையில் ஓர் இடத்தில் குவித்து வைத்திருந்ததையும், பின்னர் அதை வாகனங்கள் மூலம் அள்ளி செல்வதையும் கண்டறிந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவா பாளையம் அருகே தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் பறித்து வைத்த குழியை மூடி மர்ம நபர்கள் மணல் அள்ளி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக வாங்கல் அருகே மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி மூடப்பட்டது. இதனால் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள காவிரி ஆற்றில் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மணலை அள்ளி கரையில் ஓர் இடத்தில் குவித்து வைத்திருந்ததையும், பின்னர் அதை வாகனங்கள் மூலம் அள்ளி செல்வதையும் கண்டறிந்தனர்.
அதையடுத்து மணல் திருட்டை தடுக்கும் வகையில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே ஜேசிபி மூலம் ஆழமாக குழி பறித்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் சில நாட்களாக மணல் திருட்டு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் ரோட்டின் குறுக்கே அதிகாரிகள் பறித்த குழியை மூடிவிட்டு இரவில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






