என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச பொது மருத்துவ முகாம்
- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
- ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
கரூர்,
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கோயம்பத்தூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உடன் இணைந்து ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம மக்களின் நலனுக்காக இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தியது. டிஎன்பிஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை, நிறுவனத்தின் செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், கோயமுத்தூர். ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மாதேஷ்வரன், தலைமையில் 24 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மூளை மற்றும் நரம்பியல், முதுகு தண்டுவடம், சிறுநீரகம், வயிறு, நுரையீரல், இருதயம், எலும்பு, தோல், குழந்தைகள் நலம், மகப்பேறு, கர்ப்பப்பை, காது, மூக்கு, தொண்டை, புற்றுநோய், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் அறிகுறிகளுக்கும் பொது மருத்துவர், மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த சுமார் 692 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தப் பரிசோதனை, பி.எம்.டி. பி.எப்படி., ஈ.சி.ஜி. பரிசோதனையும் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. காகித நிறுவனத்தின் சார்பாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காலை சிற்றுண்டி மதிய உணவு. தேநீர் மற்றும் பேருந்து வசதி அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது.
இச்சிறப்பு மருத்துவ முகாமினை காகித நிறுவனத்தின் மனித வளத்துறை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமையில் மனித வளத்துறை அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.






