என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய 3 முன்னாள் மாணவர்கள் கைது
- கரூர் அருகே குடிநீர் தொட்டியில் சோப்பாயில் ஊற்றி கலந்த 3 முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
- தலைமை ஆசிரியரை பழி தீர்க்க குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியதாக ஒப்புதல்
கரூர்,
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி அருகேயுள்ள வீரணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளில் கடந்த 11-ந் தேதி இரவு மர்ம நபர்கள் ேசாப்பு ஆயிலை கலந்து சென்றனர். இதையடுத்து மறுநாள் பள்ளிககு சென்ற மாணவ, மாணவிகள் குடிநீரை பயன்படுத்தியபோது சோப்பு நெடி வீசியதை அறிந்து, தலைமை ஆசிரியர் ஜேசுராஜியிடம் புகார் செய்தனர். பின்னர் அவர் போலீசில் புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் சோப்பு ஆயிலை கலந்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 3 பேரை பிடித்து விசாரித்ததில், குடிநீர்த் தொட்டியில் சோப்பு ஆயிலை கலந்தது அவர்கள்தான் என உறுதியானது.கடந்த ஆண்டு இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த இந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததை தலைமை ஆசிரியர் கண்டித்தாராம். இதனால் அவர் மீதுள்ள கோபத்தில், அவரை பழிவாங்குவதற்காக இச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






