search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    • நாகர்கோவில், வடசேரி பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.
    • விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், வடசேரி பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிளாட்சன் எர்வர்ட்சாம். இவரது மகன் நிவேத் (வயது 19).

    நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் நிவேத் படித்து வந்தார்.நேற்று இரவு நிவேத் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.வெளியே சென்ற நிவேத் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வடசேரியில் இருந்து பள்ளிவிளை நோக்கி வந்து கொண்டிருந்த போது காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதில் நிலை தடுமாறி நிவேத் ரோட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    சிறிது நேரத்திலேயே நிவேத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான நிவேதின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×