என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
- இன்று அதிகாலை மர்ம நபர் துணிகரம்
- மண்டைக்காடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் பாணன்விளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவர் சவூதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி நிர்மலா (வயது 43). இவர் தனது 2 குழந்தைகளுடன் வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கினார்.இன்று அதிகாலை 1.40 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார்.
அவர் வீட்டின் அறைகளில் உள்ள பீரோக்களை திறந்து நகை, பணம் ஏதாவது இருக்குமா?என பார்த்துள்ளான். எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் திரும்பி செல்லும்போது தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளான்.
கழுத்தில் ஏதோ ஊர்வதுபோல் உணர்ந்த நிர்மலா உடனே கண் விழித்து எழுந்தார். அப்போதுமர்ம நபர் நிர்மலாவிடம் இருந்து பறித்த 7 பவுன் தங்க நகையுடன் பின் பக்க வாசல் வழியாக தப்பியோடினான். உடனே நிர்மலா சப்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
அக்கம்பக்கத்தினர் கூடியதும் தப்பியோடிய நபர் வெளியே காத்து நின்ற பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டான். அந்த பைக்கில் 3 பேர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நிர்மலா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.