

தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக அனைத்து குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக குற்றால சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் குற்றாலம் சாரல் திருவிழா நடத்துவதற்கு அரசு சார்பில் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சாரல் திருவிழா குற்றாலத்தில் நடத்தப்படும் இடமான கலைவாணர் கலையரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அங்குள்ள ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் வேலை பார்க்கப்பட்டு அரங்கம் முழுவதும் வர்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் சாரல் திருவிழா நடத்துவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.