search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
    X

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு

    • கபிலர்மலை சுற்று வட்டார பகுதி உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான அண்ணா நகர், பொன்மலர்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பாளையம், பாகம் பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி. கவுண்டம் பாளையம் ,திடுமல், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ரூ.2,400வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,200 -க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250 விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×