என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் கனமழையால் குடைப்பிடித்தப்படி பஸ்சுக்காக காத்திருப்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள்.
தஞ்சை மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று, இன்று விட்டு விட்டு மழை பெய்தது.
- காலை 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 1 மணி நேரம் பெய்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழுவதும் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, குருங்குளம், பாபநாசம், பேராவூரணி, கும்பகோணம், மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டியது.
இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.
இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இன்று காலையும் தஞ்சையில் மழை நீடித்தது.
காலை 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 1 மணி நேரம் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் , வேலைக்கு செல்வோர் என பலர் நனைந்தப்படி சென்றனர்.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பாதுகாப்பான இடத்தில் நின்றுவிட்டு மழை நின்றவுடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.
மேலும் பயணிகள் குடைப்பிடித்தப்படி பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பொழிந்தது.
இன்று மாலை, இரவு நேரங்களிலும் மீண்டும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழையால் மாவட்டத்தில் 1 கூரை வீடு, 2 ஓட்டு வீடு என 3 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 280 மி.மீ. மழை கொட்டியுள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 35.80 மி.மீ.யும், கும்பகோணத்தில் 35 மி.மீ.யும் மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
மதுக்கூர்-38.80, கும்பகோணம்-35, திருவிடைமருதூர்-22.60, குருங்குளம்-22, அய்யம்பேட்டை-19, தஞ்சாவூர்-18.50, அதிராம்பட்டினம்-18.20, பட்டுக்கோட்டை-18.






