search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலிண்டர் வாங்கவும், தினசரி செலவுகளுக்கும் பேருதவியாக உள்ளது:ரூ.1,000 உரிமைத்தொகை கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நெல்லை மாநகராட்சி 51-வது வார்டில் உள்ள மகளிர் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கோலமிட்டனர்.

    சிலிண்டர் வாங்கவும், தினசரி செலவுகளுக்கும் பேருதவியாக உள்ளது:ரூ.1,000 உரிமைத்தொகை கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்

    • இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    நெல்லை:

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இல்லத்தரசிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-




    சுதா (நெல்லை புதுப்பேட்டை)

    நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை எனது வங்கி கணக்கில் நேற்றே வந்து சேர்ந்துவிட்டது. இதற்கான குறுந்தகவல் எனது போனுக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தொகை எனது மகன்களின் டியூசன் கட்டணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வாங்கி கொள்வேன். அரசுக்கு மிக்க நன்றி.




    கவிதா (செங்கோட்டை)

    எனது கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். ரூ.1000 உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் தனி ஆளாக வேலைக்கு சென்று சிரமப்பட்டு வருகிறார். கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இந்த தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.




    சண்முக சுந்தரி (செங்கோட்டை)

    ரூ.1000 உரிமை தொகைக்காக முன்னோட்டமாக எனது வங்கி கணக்கில் 10 பைசா ஏற்றப்பட்ட குறுந்தகவல் வந்தது. இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றே எனக்கு பணம் ஏறிவிட்டது. எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். 2 கைக்குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன். திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சாந்தா (நெல்லை சந்திப்பு)



    அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இன்று முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் நேற்றே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விட்டது. நான் இன்று காலையிலேயே அந்த தொகையில் ரூ.300-க்கு எனது போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டேன். இப்போது கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்க போகிறேன். மாதத்தில் 10 நாட்களுக்கு எங்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.




    ஜீவா (ஆலங்குளம்)



    பெண்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சிறு சேமிப்பு தொகையாக இது உள்ளது. மாதந்தோறும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தை பெற வங்கிக்கு அலைவதை தவிர்த்து அதற்கு எளிய வழிமுறை ஏதேனும் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    செல்வி (கீழப்பாவூர்)




    எனது கணவர் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைத்ததனால் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரையில் தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    முனீஸ்வரி (தூத்துக்குடி திரேஸ்புரம்)



    எனக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்க பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீட்டின் சிறு சிறு அவசர தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    மேரி பிரான்சிஸ் (தூத்துக்குடி குரூஸ்புரம்)



    மகனின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வரும் எனக்கு கலைஞரின் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க பெற்றதால் சுய தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்காமல் செலவு செய்ய உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ராதா (தூத்துக்குடி ஆரோக்கியபுரம்)



    இட்லி வியாபாரம் செய்யும் எனக்கு ரூ. 1,000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். இதன் மூலம் எனது பேத்தியின் படிப்புக்கும், தினசரி செலவிற்கும் உதவி கரமாக இருக்கும்.

    Next Story
    ×