search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை எச்சரிக்கை-கடல் சீற்றம்   விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    X

    எக்கியர் குப்பம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கனமழை எச்சரிக்கை-கடல் சீற்றம் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மணிலா, தர்பூசணி போன்ற விவசாய பயிர்களை நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத் துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை கடற்கரை ஓரத்தில் இருந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் இன்று முதல் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறையும். இதனால் மீன் விலை அதிகரிக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×