என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் நடமாடிய சிறுத்தையால் வாகனம் ஓட்டிகள் அச்சம்
    X

    சாலையோரம் நடமாடிய சிறுத்தையால் வாகனம் ஓட்டிகள் அச்சம்

    • வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடும்
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்து உலா வந்து கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவதும், ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகின்றன.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்து உலா வந்து கொண்டிருந்தது.

    அரேப்பாளையம் கிராமத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் நடமாடியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கிட்டத்தட்ட 20 நிமிடம் சாலையோரம் அந்த சிறுத்தை நடமாடியது.

    அப்போது காரில் வந்த வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிறிது நேரம் சாலையில் உலா வந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடும் எனவும், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதைப்போல் ஆசனூர் சாலையில் சிறுத்தை உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×