search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் சதுர்த்தி விழாவுக்காக 30 வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் - ஆர்டர்கள் குவிகிறது
    X

    காலாங்கரை பகுதியில் பேப்பர்கூழ், ஜவ்வரசி, கிழங்குமாவு, களி மண்ணால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்.


    செங்கோட்டை பகுதியில் சதுர்த்தி விழாவுக்காக 30 வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் - ஆர்டர்கள் குவிகிறது

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    செங்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    அங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விநாயர் சிலைகள் தயார் செய்து வருகிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் விஜயவாடா, திருப்பதி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ் உள்ளிட்ட மூல பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் சிலைகளை 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு தயாரித்து வருகின்றனர்.

    இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ. ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இங்கு தயார் செய்யப்படும் சிலைகள் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பபடுகிறது. இது குறித்து சிலைகள் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழாக்கள் நடத்தப்படாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தது. இதனால் பெரும் நஷ்டம் மடைந்திருந்தோம்.

    இந்தாண்டு வழக்கம் போல விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் தற்போது அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளன.

    நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரையக் கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரசி, கிழங்குமாவு, களி மண் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் யாருக்கும் பாதிப்பில்லா வண்ணம் விநாயகர் சிலைகள் தயாரிக்க பட்டுள்ளது.

    தற்போது எங்களிடம் மூன்றுமுக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயண விநாயகர், நந்திகேஷ்வர விநாயகர், கற்பக விநாயகர், திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் 30 மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம்.

    அவைகள் செங்கோட்டை மட்டுமல்லாது கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சிலைகள் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப விலையில் அமைந்துள்ளதால் அதிகளவு மக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இவற்றை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×