என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
- கண்காட்சியில் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.
- பாரம்பரிய உணவு கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும், வறட்சியை தாங்கி வளரக் கூடியதாகவும் உள்ளது.
தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்கான கண்காட்சி நடத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதன் அடிப்படையில் பல்வேறு பயிர் ரகங்களை கண்டறிந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டம் தோறும் இதுகுறித்து கண்காட்சி நடத்திட வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.
கண்காட்சியை சேரன்மகா தேவி ஸ்காட் பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை10 மணிக்கு அட்மா வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம். வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி ரகங்களை கட்சிப்படுத்துதல், விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது ரகங்களை காட்சிப்படுத்தவும், கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்தகவலை நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.






