search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை படத்தில் காணலாம்.

    பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    • விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.

    ஈரோடு:

    ஈரோடு கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆயக்கட்டில் இல்லாத சிலரால் இந்த பணிகள் முடக்கப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022 - 2023) மட்டும் 4 முறை கால்வாயில் உடைப்புகள் ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் இடை நிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை வரும் மே 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.

    மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணிகளை செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    எனவே வரும் 1-ந் தேதி எவ்வித காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் கூறும்போது, வரும் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 5-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    விவசாயிகளின் இந்த திடீர் காத்திருப்பு போராட்டம் காரணமாக ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.

    Next Story
    ×