search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளக்கரைத் திடலில் கடைகள் அமைப்பதால்  வாகனங்கள் நிறுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
    X

    குளக்கரைத் திடலில் கடைகள் அமைப்பதால் வாகனங்கள் நிறுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

    • நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
    • இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும்.

    நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில் தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக மற்றும் பந்தல் அமைப்பதற்காக பேவர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல் கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×