search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ப்பு யானைகள் தேசியக்கொடிக்கு மரியாதை
    X

    வளர்ப்பு யானைகள் தேசியக்கொடிக்கு மரியாதை

    • சுதந்திரம் மற்றும் குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம்.
    • பொம்மி, ரகு உள்பட 15-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் மற்றும் குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம்.

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று முதுமலையில் வனத்துறையினர் கொண்டாடினர். இதையொட்டி தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டது. தொடர்ந்து பொம்மி, ரகு உள்பட 15-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது.

    பின்னர் கரும்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர் வனச்சரகர் மனோகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர்கள் விஜயன், பவித்ரா, மனோஜ் உள்பட வனத்துறையினர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல் வளர்ப்பு யானைகள் துதிக்கையை தூக்கி பிளிறியவாறு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின. இதை சுற்றுலா பயணிகள் கண்டு நெகிழ்ந்தனர். முன்னதாக சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து வளர்ப்பு யானைகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×