search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை- மாவட்ட ஆட்சியர்
    X

    (கோப்பு படம்)

    திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை- மாவட்ட ஆட்சியர்

    • சூரசம்ஹாரத்தன்று, பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும்.
    • சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:

    கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாதம் 30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களுக்காக பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும். சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    கந்த சஷ்டித் திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×