search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியீடு
    X

    நெல்லை, தென்காசியில் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியீடு

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது பிசான பருவம் தொடங்க இருக்கிறது.
    • விதைகள் விற்பனை செய்வதற்கு விதை ஆய்வு துணை இயக்குனரிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பிசான பருவம் தொடங்க இருக்கிறது.

    விதை விற்பனையாளர்கள் அதிக முளைப்புத்திறன், இனத்தூய்மை நல் விதைகளை விவசாயி களுக்கு வழங்க வேண்டும் என நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    விதைகள் விற்பனை செய்வதற்கு விதை ஆய்வு துணை இயக்குனரிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இன்றி அல்லது காலாவதியான உரிமத்துடன் விதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    விதை விற்பனை யாளர்கள் தம்மிடம் உள்ள விதை இருப்பு மற்றும் விலை விபர பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும்படி எடை போடும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். விதைகளை உரம் மற்றும் பூச்சி மருந்துடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்திருக்க வேண்டும்.

    விதை விற்பனை யாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை ஒவ்வொரு வியாழன் அன்றும் "SPECS" இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இதனால் விற்பனை நிலையங்களில் உள்ள இருப்பு அறிந்து எவ்வித விடுதலும் இன்றி விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதால் தரமான விதைகள் விவசாயி களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் விதை எந்த விற்பனையாளரிடம் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளரின் கைபேசி எண்ணுடன் அறிந்து கொள்ள முடியும்.

    தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மைநிலை விதைகள் அனைத்தையும் கோய முத்தூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழ்நாடு தட்பவெப்ப நிலைக்கு பொறுத்தமில்லாத மற்றும் தரமற்ற தனியார் நிறுவன விதைகள் விற்பனை செய்யப்படுவது கட்டுப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பதிவு எண் பெறாத விதைகளை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

    விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்ற விபரங்களுடன் விவசாயி மற்றும் விற்பனையாளர் கையொப்பம் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிகளை கடைபிடிக்காத நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விதை விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×