search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே நாய் கடித்து குதறியதில் உயிரிழந்த மான்:குடிநீர் தேடி வந்த போது பரிதாபம்
    X

    நாய் கடித்ததில் உயிரிழந்த மானை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே நாய் கடித்து குதறியதில் உயிரிழந்த மான்:குடிநீர் தேடி வந்த போது பரிதாபம்

    • நேற்று இரவு தியாகதுருகம் அடுத்த எஸ். முகையூர் கிராமத்திற்கு வந்து, குடியிருப்பு பகுதியில் நீர் குடித்து திரும்பிச் சென்றது.
    • வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை காப்புக்காட்டில் புதைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் காப்புக்காட்டில் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் காடுகளில் ஏற்படும் குடிநீர் பஞ்சம், உணவு பற்றாக்குறை உருவாவதால் இவைகள் அனைத்தும் ஊருக்குள் வந்து செல்வது வழக்கம். அதன்படி, காப்புக்காட்டு வனப்பகுதியில் இருந்த மான் ஒன்று, நேற்று இரவு தியாகதுருகம் அடுத்த எஸ். முகையூர் கிராமத்திற்கு வந்து, குடியிருப்பு பகுதியில் நீர் குடித்து திரும்பிச் சென்றது. அப்போது ஊருக்குள் இருந்த நாய்கள் இந்த மானை விரட்டியது. இதனை கண்ட ஒரு சிலர் நாயை விரட்டினர். இருந்தபோதும் கும்பலாக இருந்த நாய்கள் மானை விரட்டி கடித்து குதறின.

    இதில் அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகில் மான் மயங்கி விழுந்தது. இந்த மானிற்கு பொதுமக்கள் குடிநீர் வைத்தனர். அதனை குடிக்காமல் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை காப்புக்காட்டில் புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கோடை காலத்திலும், காட்டில் இருந்து மான், முயல் போன்றவைகள் ஊருக்குள் வருவதும், அவைகளை நாய்கள் கடிப்பதால் உயிரிழப்பும் தொடர்கதையாக உள்ளது. எனவே, காப்புக்காடு வனப்பகுதியில் பழ மரங்களை வைத்து பராமறித்து விலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டும். காட்டைச் சுற்றியும் தொட்டி கட்டி விலங்குகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×