என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
    • சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

    நேற்று சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனையும் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியானார்.

    சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

    இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    இச்சந்திப்பின்போது, அமைச்சர் சண்முகம், கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைய பாதுகாப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடினார்.

    அப்போது சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசும்போது சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இச்சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். ஒசாகா சென்றடைந்த அவர், அங்கு நாளை காலை தொழில் அதிபர்களை சந்தித்து உரையாட உள்ளார்.

    நாளையும் நாளை மறுதினமும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் அழைப்பு விடுக்க உள்ளார்.

    Next Story
    ×