search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11 இடங்களில் புதிய மின்பகிர்மான கோட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X

    11 இடங்களில் புதிய மின்பகிர்மான கோட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    • தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 79 ஆயிரத்து 239 மின் இணைப்புகளும், கூடலூர் கோட்டத்தில் குறைந்தபட்சமாக 68 ஆயிரத்து 22 மின் இணைப்புகளும் உள்ளன.
    • புதிதாக 11 மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது. உதாரணமாக, தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 79 ஆயிரத்து 239 மின் இணைப்புகளும், கூடலூர் கோட்டத்தில் குறைந்தபட்சமாக 68 ஆயிரத்து 22 மின் இணைப்புகளும் உள்ளன.

    பணிகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில், நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என 2021-22-ம் ஆண்டிற்கான எரிசக்தித்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகளை சமநிலைப்படுத்துவதற்காகவும், நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், பொதுமக்களின் புகார்களின் மீது உடனடி தீர்வு காண்பதற்காகவும், மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள 176 மின் பகிர்மான கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை சேப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணைநல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவள்ளி ஆகிய இடங்களில் புதிதாக 11 மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×