கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் யார்?

ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் யார்?
Published on

கோவை,

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்குள் நேற்றுமுன்தினம் மாலை மர்மநபர் ஒருவர் புகுந்து கதவை அடைக்க முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த ஊழியர் பார்த்து, அவரை பிடித்து வெளியே தள்ளினார்.

இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே இரவில் அவினாசி சாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த நபர், அவினாசி ரோடு ஜி.டி. அருங்காட்சியகம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ஆனால் இதுவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பஸ்சில் விழுந்து தான் இறந்தாரா? அப்படி தற்கொலை செய்து கொண்டால் அதற்கான காரணம் என்ன? தற்கொலை செய்யும் போது அந்த நபர் போதையில் இருந்தரா எனவும் விசாரணை நடக்கிறது.

தற்கொலை செய்தவர் எதற்காக பா.ஜனதா அலுவலகத்திற்குள் நுழைந்தார்? அவர் அங்கு நுழைந்தற்கான நோக்கம் என்ன? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் குறித்த முழு விவரமும் கிடைத்த பிறகே அவர் தற்கொலை செய்தற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com