வால்பாறையில் இன்று காலை தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களை தாக்கிய கரடிகள்

இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது. 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
வால்பாறையில் இன்று காலை தேயிலை தோட்ட  பெண் தொழிலாளர்களை  தாக்கிய கரடிகள்
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது. அந்த கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.

அப்போது தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுமதி (வயது 25), ஹித்தினி குமாரி (26 ) ஆகியோரை கரடிகள் திடீரென தாக்கியது.

இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பெண்களை தாக்கிய கரடிகளை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர்.

கரடி தாக்கியதில் 2 பெண்களுக்கும் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கரடி தாக்கியதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து டாக்டர்கள் 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு 2 பெண்களுக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 பெண்களுக்கும் ரூ. 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com