search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி  குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்-  அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்த காட்சி.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு

    • கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும்.
    • தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் பாளை சாரதா கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும். நம் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிவிகள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    இத்திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ-மாணவிகள் எதிர்காலத்தில் உயர்கல்வி கற்பதை எளிமையாக தங்களின் திறமைக்கேற்ப நீங்களே தேர்தெடுத்து படிக்க உறுதுணையாக இருக்கும்.

    மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது.

    இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப்படிப்புகளை தேர்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, இதையெல்லாம் எடுத்து கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நூல்களை வழங்கினார். மேலும் 12 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 156.25 லட்சம் கல்விக்கடன் உதவிகளையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷாப், திட்டஇயக்குனர் பழனி, தேசிய தகவலியல் மையம் ஆறுமுகநயினார், பாளை யூனியன் தலைவர் தங்கப்பாண்டியன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×