

மேட்டூர்:
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சபரி மலை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால், கார்த்திகை மாத பிறப்பான இன்று, மேட்டூரில் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர். இதன்படி மேட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் புது ஆடை அணிந்து, மாலை அணிந்தனர். இவர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு உள்ளனர். அவரவர் வசதிக்கு ஏற்ப 48 நாட்கள் அல்லது 2 வாரம் என்ற கணக்கில் விரதத்தை மேற்கொள்வார்கள். விரத காலம் முடிந்ததும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய உள்ளனர்.