தூத்துக்குடி நகர வீதிகளில் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பவனி- பெண்கள் மாவிளக்கு ஏந்தி வழிபாடு

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 40-வது ஆண்டாக அனைத்து அம்பாளின் அருட்சப்பர பவனி தூத்துக்குடி நகர வீதிகளில் நடைபெற்றது.பவனியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு துள்ளல் மிகு நடனமாடி மகிழ்ந்தனர்.
சிவன் கோவில் அருகே சப்பரபவனி வந்த போது எடுத்தபடம்.
சிவன் கோவில் அருகே சப்பரபவனி வந்த போது எடுத்தபடம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 40-வது ஆண்டாக அனைத்து அம்பாளின் அருட்சப்பர பவனி தூத்துக்குடி நகர வீதிகளில் நடைபெற்றது.

பவனியில் பாரதமாதா,மேலூர் பத்திரகாளியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன்,அழகேசபுரம் வடக்குவாச்செல்வி அம்மன், மட்டக்கடை சந்தனமாரியம்மன், 1-ம் கேட் ஆதிபரமேஸ்வரி அம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் சுற்றுப்புற கோவில்களில் உள்ள சப்பரங்களும் கலந்துகொண்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து மத்திய பாகம் காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக செண்டா மேளம், ராஜமேளம்,உருமி மேளம்,தாரை தப்பட்டைகள் என நான்கு வகையான மேளங்கள் வாணவேடிக்கையுடன், வெகுவிமரி சையாக வலம் வந்து நள்ளிரவு 11.30 மணிக்கு சிவன் கோவில் முன்பாக அனைத்து அம்பாள் சப்பரங்களும் அணிவகுத்து வந்தது. பின்னர் பன்னீர் அபிஷேகம்,பட்டு சாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவனியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு துள்ளல் மிகு நடனமாடி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்டு 508 மாவிளக்கு ஏந்தி வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரணி அமைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன், விவேகம் ரமேஷ்,சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா,இந்து முன்னணி சட்ட ஆலோசகர்கள் செல்வராஜ்,நாகராஜ், கருப்பசாமி, இசக்கி லட்சுமி மற்றும் சப்பர பேரணி கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபால், அமைப்பாளர் சிவக்குமார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர்கள் வன்னியர் ராகவேந்திரா சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

X

Maalai Malar
www.maalaimalar.com