என் மலர்
உள்ளூர் செய்திகள்

தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
- தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி, வடை மாலை அணிவித்து, மகாதீபாராதனையுடன் வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் பைரவரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
இதுபோல் காரைக்குறிச்சி சௌந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






