என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • கர்ப்பிணி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி

    அரியலூர்:

    அரியலூர் அருகே கர்ப்பிணி கொலை வழக்கில் தொடர்புடைய அவரது கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆண்டிமடம் கடைவீதியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் புகழேந்தி(வயது32). இவருக்கும் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் நிர்மலா(26) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.

    இதில் கருவுற்ற நிர்மலாவுக்கு வளைகாப்பு செய்ய பெண்ணின் வீட்டார் முடிவெடுத்த நிலையில், திருமணத்தின் போது நிர்மலாவுக்கு செய்ய வேண்டிய 7 பவுன் நகையை செய்யவேண்டும் என புகழேந்தி வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நிர்மலா கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் எரிந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து சென்ற ஆண்டிமடம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், வரதட்சனை கேட்டு தனது மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக நிர்மலாவின் தாய் நீலாவதி, அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், புகழேந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்மலாவிடம் வரதட்சனை கேட்டு,அவரை கொடுமை படுத்தி தீயிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகழேந்தி மற்றும் அவரது தாய் அமுதா ஆகியோரை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

    இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த புகழேந்தியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலர் டி.அம்பிகா, இந்திய வாலிபர் சங்க மாவட்டச் செயலர் துரை.அருணன், மாவட்டப் பொருளாளர் அருண்பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    Next Story
    ×