என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு
- நியாயவிலைக் கடைகளில் அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- சுத்தம், சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தல்
அரியலூர்,
உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக் கடைகளை கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. இந்த திடீர் ஆய்வில் உடையார்பாளையம் வட்டம், த.பொட்டகொல்லை கூட்டுறவு நியாய விலைக்கடை, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நியாய விலைக்கடை ஆகிய நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு பொருள் இருப்புப் பதிவேடு, பொருள் விநியோகப் பதிவேடு, மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வரவு, இருப்பு, விற்பனை குறித்த விவரங்கள், விற்பனைப் புத்தகம், நியாய விலைக்கடை திறக்கும் நேரம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நியாய விலைக்கடை பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து சரியான நேரத்திற்கு விநியோகிக்கவும், பொருட்கள் இருப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை நேரில் பார்வையிட்டு சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், த.மேலூர் அங்கன்வாடி மையத்தினைப் பார்வையிட்டு பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் அங்கன்வாடி மையத்தினைத் தொடர்ந்து தூய்மையாக பராமரிப்பதுடன், குழந்தைகளுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து தயாரித்து வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் தி துரை, வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






