search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட்டை ரத்து செய்ய அ.தி.மு.க.வும் அழுத்தம் கொடுக்க வேண்டும்- அமைச்சர் பேட்டி
    X

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

    நீட்டை ரத்து செய்ய அ.தி.மு.க.வும் அழுத்தம் கொடுக்க வேண்டும்- அமைச்சர் பேட்டி

    • ஏழை மாணவர்கள் ரூ.3 லட்சம் வரை கட்டி நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு படிக்கிறார்கள்.
    • கவர்னர் நீட் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஒவ்வொரு முறையும் பேசி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தமிழகத்திற்கு மட்டுமானது அல்ல.ஒட்டுமொத்த இந்தியாவிற்கான குரலாக இந்த உண்ணாவிரதம் ஒலிக்கும்.கொரோனா காலத்தில்,பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், நீட் பயிற்சி மையங்கள் நலிவடையாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.மத்திய அரசு நீட் பயிற்சியை வணிகமாக பார்க்கிறது.எங்களைப் பொறுத்தவரை மாணவச் செல்வங்களின் உணிர் முக்கியம்.

    பிளஸ்-2 முடித்தவுடன் இரண்டு, மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி முடித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்கிற மன அழுத்தத்தை தரக்கூடாது. ஏழை, எளிய மாணவர்களை பொறுத்த வரை கடனை வாங்கி ஒன்றரை முதல் மூன்று லட்சம் வரை கட்டி நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு படிக்கிறார்கள்.

    அப்படி படிக்கும்போது அந்த முறை வெற்றி பெறவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக குடும்பத்தையும் பாதிக்கின்ற மனநிலை ஏற்படுகிறது.சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்த மாணவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரியலூர் மாணவி அனிதா ஆரம்பித்து,மாணவர் ஜெகதீஷ் அவரது தந்தை உள்ளிட்ட பலரை நாம் இழந்து உள்ளோம். இதற்காக ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கவர்னர் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஒவ்வொரு முறையும் மைக்கை பிடித்து பேசி வருகிறார்.

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் முரண்பாடு சிந்தனை கொண்டவராக கவர்னர் செயல்படுகிறார். மத்திய அரசுக்கும் அவர்களின் கைபாவையாக இருப்பவர்களுக்கும் மனிதாபிமானம் என்பது இல்லாமல் போய்விட்டது.

    அரசியலைக் கடந்து பொதுநலத்துடன் சிந்தித்துப் பாருங்கள். நீட் தேர்வை நீக்கும் பணியில் எதிர்க்கட்சிகளாகிய அ.தி.மு.க.வும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரும் பொழுது அ.தி.மு.க தமிழக மக்களின் நலன் கருதி சட்டசபையில் இல்லாமல் வெளியேறி விடுகின்றனர். மத்திய அரசுடன் கூட்டணி உள்ள அ.தி.மு.க நீட் எதிர்ப்பு தொடர்பான அழுத்தங்களை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×