என் மலர்
உள்ளூர் செய்திகள்

அவுட்டுக்காய் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடினால் நடவடிக்கை
- வனத்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு
- வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் மக்களே விரட்ட முயலக்கூடாது எனவும் அறிவுரை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவுட்டுக்காய் கடித்து யானை உள்ளிட்ட வனவி லங்குகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர், பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடந்துறை, லிங்காபுரம், கோவிந்தனூர், திம்மராயம்பாளையம், குஞ்சப்பனை, துதிக்கரை, மந்தாரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரில் சென்று அவுட்டு காய் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவது, நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம். வனவிலங்குகளை வேட்டையாடினால் வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற செப்டம்பர் 30 -ந் தேதிக்குள் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர் அதனை காவல் நிலையத்திலோ, வனத்துறை அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும். மேலும்,வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் அதனை மக்களே விரட்ட முயலக்கூடாது. வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.






