search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போத்தனூர் டாஸ்மாக் கடை அருகே மது பிரியர்களிடம் குடிக்க வேண்டாம் என துண்டுச் சீட்டு வழங்கிய வாலிபர்
    X

    போத்தனூர் டாஸ்மாக் கடை அருகே மது பிரியர்களிடம் குடிக்க வேண்டாம் என துண்டுச் சீட்டு வழங்கிய வாலிபர்

    • அடுத்த நிமிடமே துண்டு சீட்டுடன் குடிக்க சென்ற குடிமகன்களால் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யாரும் குடிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே சாரதா மில் ரோட்டில் எதிர் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    24 மணி நேரமும் அங்கு வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக தான் செல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்டாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் குடிபோதையில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டே இருப்பார்கள்.

    சம்பவத்தன்றும் டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மதுபிரியர்களும் மதுவை வாங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, டாஸ்மாக் கடைக்கு சென்ற வாலிபர்களிடம், மதுகுடிக்க வேண்டாம் என்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    மேலும் யாரும் குடிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் குடும்பத்தையே பாதிக்கும். அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள் என அவர்களிடம் கூறியதுடன், துண்டு சீட்டையும் வழங்கினார்.

    அவர்களும் ஆர்வமாக அந்த துண்டு சீட்டினை வாங்கி கொண்டனர். அதனை பார்த்த அந்த வாலிபர் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆனால் அவரின் சந்தோஷம் சில துளி நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.துண்டு சீட்டை பெற்று கொண்ட குடிமகன்கள் அனைவரும் அடுத்த நொடியே அதனை மடித்து பாக்கெட்டில் வைத்து கொண்டு டாஸ்மாக் கடைக்குள் சென்றனர்.

    இதை பார்த்த வாலிபருக்கு அதிர்ச்சி உண்டானது. தொடர்ந்து அவர் வலியுறுத்தினார். ஆனால் அதனை யாருமே கண்டு கொள்ளாமல் தாங்கள் மதுபாட்டில்களை வாங்குவதிலேயே கவனம் செலுத்தினர். இறுதியில் வாலிபரும் துண்டு சீட்டை வினியோகித்து விட்டு, அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார். இதனை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் 24 மணி நேரமும் சரக்கு விற்கக்கூடிய இந்த இடத்தில், இவர் வந்து பேசினால் மட்டும் கேட்கவா போகிறார்கள் என்று தங்களுக்குள் சலித்துக் கொண்டு சென்றனர்,

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், யாரும் யாரையும் மாற்றி விட முடியாது. அவரவர் திருந்தினால் மட்டுமே மாற முடியும். நாம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தனர்.

    Next Story
    ×