search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- லாரிகள் உள்பட 12 வாகனங்கள் சிக்கின
    X

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- லாரிகள் உள்பட 12 வாகனங்கள் சிக்கின

    • மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனையில் 35 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மானூர் அருகே துணிப்பைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இரவு அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது மானூர் அருகே உள்ள தென்கலம் பகுதியை ஒட்டிய தனியார் சுண்ணாம்பு குவாரி பகுதியில் துணிப்பைகளில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரிசியை கடத்தி செல்வதற்காக லாரி உள்பட 5 வாகனங்கள், 7 மோட்டார் சைக்கிள்களும் அங்கு இருந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருந்த நபர்களை தேடி வருகின்றனர்.

    போலீசார் வாகன சோதனையில் பிடிபடாமல் இருக்க ரேஷன் அரிசியை துணிப்பைகளில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×