search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து டாக்டர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கும்பல் கைது

    ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து டாக்டர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டாக்டர் தங்கவேலு வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (44). தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோகசந்திரன் என்ற மகன் உள்ளார். டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை டாக்டர் சந்திரன். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் விஷ்ணுதீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக கடந்த 22-ந் தேதி குடும்பத்துடன் விருதாச்சலத்துக்கு சென்று விட்டார்.

    மீண்டும் நேற்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதையடுத்து அவர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை துப்பறியும் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாத வகையில் வீட்டில் மிளகாய் பொடிகளையும் தூவி இருந்தனர். இதையடுத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள மற்ற இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் டாக்டர் விஷ்ணு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டரின் கிளினீக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடிய போது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் போலீசாரை கண்டதும் பதட்டத்தில் இருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை சந்திரன் நடத்தி வரும் கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் அடிக்கடி நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் வீட்டுக்கும் சென்று வந்தேன். இதனால் அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். அப்போது டாக்டர் விஷ்ணு தீபக் வீட்டில் அதிக அளவில் நகை-பணம் இருப்பது எனக்கு தெரிய வந்தது.

    எனவே அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காத்து இருந்தேன். அதன்படி கடந்த 22-ந் தேதி டாக்டர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக கோவை சுந்தரா புரத்தைச் சேர்ந்த எனது தம்பி அருண்குமார் (24), அவரது நண்பர்கள் பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகியோரை அழைத்தேன். அவர்கள் ஒரு கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து காரை ஓரமாக நிறுத்தி விட்டு டாக்டர் வீட்டின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து குளியல் அறையில் இருந்த வெண்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தோம்.

    பின்னர் சாவி போட்டு வீட்டின் பீரோவில் இருந்த லாக்கரை திறந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டோம். பின்னர் அந்த பொருட்களை நாங்கள் பங்கு போட்டுக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வசந்தகுமார், அருண்குமார் (24), பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டாக்டர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டினார்.

    Next Story
    ×