search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ அவசர சிகிச்சை ஊர்திகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X
    மருத்துவ அவசர சிகிச்சை ஊர்திகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    256 நடமாடும் மருத்துவ சேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அங்கேயே சென்று நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் அளித்திட முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான அரசால் 2007ம் ஆண்டு 100 நடமாடும் மருத்துவ வாகனங்களும், 2008ம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வாங்கப்பட்டு, மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    ஒரு மருத்துவ குழுவில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு ஓட்டுநர், ஒரு துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டு, தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 385 வட்டாரங்களிலும் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், இந்த 385 நடமாடும் மருத்துவக்குழு வாகனங்களை நடமாடும் மருத்துவமனைகளாக மேம்படுத்தி ஆய்வக நுட்புனர்களை நியமனம் செய்து ஆய்வக வசதிகளு டன் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    2021-2022ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், “தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிதாக நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூபாய் 18 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூபாய் 70.02 கோடி நிதியினை தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக 389 வாகனங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதற்கட்டமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    8.4.2022 அன்று தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு, நடமாடும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×