search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஈரோடு அருகே பொது தேர்வுக்கு பயந்து பிளஸ்1 மாணவி தற்கொலை

    ஈரோடு அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த திங்களூர் பெரியவீர சங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருக்காணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    செந்தில்குமார் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அருக்காணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மூத்த மகள் கோபிகா (வயது 17). இவர் விஜயமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். கோபிகா சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவரது பெற்றோர் கோபிகாவை நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

    இந்நிலையில் பிளஸ் 1 பொதுதேர்வு தொடங்க இருந்ததால் கோபிகா பதற்றத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் செந்தில்குமார், அருக்காணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி கோபிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது தேர்வு பயத்தில் இருந்த மாணவி கோபிகா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் காலை 11 மணி அளவில் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் தனது மகள் கோபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    இதுகுறித்து திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வு பயத்தின் காரணமாக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×