என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த வாழை மரங்கள்.
    X
    சேதமடைந்த வாழை மரங்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை- சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்

    சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதில் மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், சிக்கரசம்பாளையம், ராமபையனூர், ராஜன்நகர், பண்ணாரி, திம்பம் மலைப்பகுதி, பவானிசாகர், தொட்டம்பாளையம் போன்ற பகுதிகளில் இரவு 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் தான் மின்சாரம் வந்தது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கியது.

    இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னகவுண்டர் என்பவர் தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 3 ஆயிரம் தேன் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

    இதுகுறித்து விவசாயி சின்ன கவுண்டர் கூறும்போது, ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்து இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் பயிர் செய்வதற்காக வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    இதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், கடும் இழப்பீட்டை சந்தித்து உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

    அம்மாபேட்டை பகுதியில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் நேற்று இரவு கொடிவேரி, பவானிசாகர் அம்மாபேட்டை, கோபி, தாளவாடி, நம்பியூர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடிவேரி-54.2, சத்தியமங்கலம்-45, பவானிசாகர்-39.4, அம்மாபேட்டை-25, கோபி-21, தாளவாடி-16.4, நம்பியூர்-13, குண்டேரிபள்ளம்-2.2, பவானி-1.4.
    Next Story
    ×