என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் சகோதரியை வெட்டிக்கொன்ற தம்பி
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50), மில் தொழிலாளி. இவரது உடன்பிறந்த சகோதரி பாஞ்சாலி (60). இவர் அழகாபுரியில் வசித்து வந்தார்.
பாஞ்சாலி சஞ்சீவி நாதபுரம் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது சொத்து பிரச்சினை காரணமாக தம்பி ரமேஷிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.
நேற்று மதியம் 12 மணி அளவில் தம்பி வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பாஞ்சாலி பின்னர் தம்பி வீட்டில் வந்து வாக்குவாதம் செய்தாராம்.
கடும் கோபத்தில் இருந்த தம்பி ரமேஷ் பரணில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் பாஞ்சாலி பிரேதத்தை ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டியது அந்தப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






