என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாயை மண்வெட்டியால் தாக்க முயன்ற தந்தையை வெட்டி கொன்ற மகன்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கரும்பாயிரம் (வயது 46). இவர் திருப்பூரில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு இரு மனைவிகள். இவர்களில் முதல் மனைவி ராதிகா (38) தனது மகன்கள் ஜீவா (23), விக்ரம் (20) உடன் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36) உடன் கரும்பாயிரம் வசித்து வந்தார்.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் உள்ள முதல் மனைவி ராதிகா மற்றும் மகன்களை பார்க்க கரும்பாயிரம் வந்தார்.
இன்று காலை கரும்பாயி ரத்துக்கும், ராதிகாவுக்கும் இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ராதிகாவை கரும்பாயிரம் மண்வெட்டியால் தாக்க முயன்றார். இதைப் பார்த்து கோபமடைந்த ஜீவா அரிவாளால் கரும்பாயிரத்தை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம்அடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகக் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கரும்பாயிரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீவாவை தேடி வருகின்றனர்.
தந்தையை மகன் வெட்டிகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.