search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கூலி தொழிலாளி கொலை: தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் அடித்து கொன்றேன்- கைதான தம்பி வாக்குமூலம்

    ஓமலூர் அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டியை அடுத்த முத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மணியன். இவரது மகன்கள் சிவகேசன் (வயது 40), வெங்கடேசன் (38) .கூலித் தொழிலாளர்களான இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    சிவகேசனின் மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யா குடும்பத்தகராறு காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது 2 குழந்தைகளையும் வெங்கடேசன் தனது குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிவகேசன், ராதா என்பவரை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இதனிடையே தந்தை மணியனிடம், தம்பி வெங்கடேசனுக்கு மட்டும் உதவி செய்வதாக கூறி சிவகேசன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    கடந்த 22-ந் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவகேசன், தந்தையிடம் தம்பிக்கு வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்வதை கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன், அண்ணன் சிவகேசனை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து சிவகேசன் தலையில் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிவகேசனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகேசன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- எனது சகோதரர் சிவகேசன் குடித்து விட்டு குழந்தைகளை சரியாக கவனிப்பது இல்லை. இதனால் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன், மேலும் எனது தந்தையிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதில் தட்டி கேட்டதால் முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்றும் எனக்கு வீடு கட்டி தருவதாக கூறி எனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டி கேட்டதால் எங்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டோம், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லால் சிவனேசனை தாக்கினேன். இதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து வெங்கடசேனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×