search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்சு பலி
    X
    நர்சு பலி

    அறந்தாங்கி அருகே காதல் விவகாரத்தில் தாயாரால் தாக்கப்பட்ட நர்சு பலி

    காதல் விவகாரத்தில் உருட்டுகட்டையால் தாய் மகளை அடித்து கொன்ற சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை. இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் சத்யா(வயது 27). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ள இவர் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டார். இதையடுத்து காதலனுடன் நெருங்கி பழகி ஊர்சுற்றி வந்ததாக கூறப்பட்டது. இதனை அறிந்த அவரின் தாயார் மகளை ஊருக்கு அழைத்து கண்டித்தார். மேலும் சென்னைக்கு வேலைக்கு செல்லவும் தடைவிதித்தார்.

    இருந்தபோதிலும் அவரால் காதலனை மறக்க இயலவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த சத்யா, தாய் இல்லாத நேரங்களில் காதலனுடன் செல்போனில் பேசி வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் காதலனோடு சேர்ந்து வாழ முடிவு செய்த அவர் நேற்று முன்தினம் பெட்டி படுக்கையுடன் சென்னைக்கு கிளம்ப தயாரானார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி, நீ உயிரோடு இருந்தால்தானே அவனோடு ஓடுவாய் என கூறியபடி அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மகளை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்யா அங்கேயே மயங்கி சரிந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுபற்றி நாகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சத்யா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில் இருந்த ஜெயலட்சுமியை இன்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×