search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழக காவல்துறையில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகள் என்ற தனி நீதிபதியின் கருத்து நீக்கம்- உயர்நீதிமன்றம் உத்தரவு

    இது தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்தை எதிர்த்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
    சென்னை:

    நாமக்கல்லைச் சேர்ந்த வசந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

    அதில், எங்களுடைய குடும்ப சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். 

    அதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். ஆனால், உண்மைக்குப் புறம்பாக புகார் இருப்பதாக கூறி இந்த வழக்கை முடித்து வைத்து போலீசார் உத்தரவிட்டனர். 

    அதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 

    ஆனால் போலீசார் மறுபடியும் புகார் உண்மைக்குப் புறம்பானது என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர். போலீசாரின் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு காவல்துறையில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். எஞ்சிய 10 சதவீத பேர் நேர்மையானவர்களாக உள்ளனர். இந்த 10 சதவீத போலீசாரை கொண்டு ஒட்டு மொத்த வழக்குகளை விசாரிக்க முடியாது. 

    எனவே, ஊழல் போலீசாரை அகற்றி, நேர்மையான போலீசாருக்கு போதிய பயிற்சிகளை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருந்தார்.

    அதை எதிர்த்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது டி.ஜி.பி. சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, தனி நீதிபதியின் கருத்து, உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்துவரும் போலீஸ் அதிகாரிகளுக்கு மிகுந்த வருத்தத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 

    இதுபோல வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள கருத்துகளை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். 

    அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளை மட்டும் நீக்கி உத்தரவிட்டனர்.
    Next Story
    ×