என் மலர்
உள்ளூர் செய்திகள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கடலூர் கலெக்டர் தகவல்
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
10-ம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, மார்ச்சு 31ஆம் தேதி ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.03.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலூர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவச மாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனு தாரர்கள் மே 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.






