என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி
    X
    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும்?- அமைச்சர் துரைமுருகன்

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

    அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பயிர்கடன் பயனாளூகளுக்கு ரூ.4.45 லட்சம் கடன் தொகையும், 13 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படியுங்கள்... சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

    Next Story
    ×