என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு
2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஈரோடு:
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை 3 அலைகள் வந்துள்ளன. தற்போது இந்தியாவில் 3-ம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 வருடம் மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு முதன் முதலில் கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதன்பின் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2-ம் அலையின் போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பரிசோதனை 10 ஆயிரம் பேருக்கு வரை எடுக்கப்பட்டது.
இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டதால் 3-ம் அலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகி இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 3-ம் அலை பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் நேற்றுடன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.
இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர்.
Next Story






