search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோயம்பேட்டில் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை

    கோயம்பேட்டில் பரிதாபம் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை கவனிக்க யாரும் இல்லாததால் விபரீத முடிவு

    போரூர்:

    கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 77). இவரது மகன் ஞானம் (53). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    கங்காதரனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கங்காதரன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    அதேபோல் சிறுவயது முதலே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஞானம் தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஞானத்தின் கால் முறிந்து வேதனையால் அவர் நடப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    தந்தை-மகன் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை கங்காதரனின் மகள் சுமதி செய்து வந்தார்.

    எனினும் கங்காதரனும், அவரது மகன் ஞானமும் தங்களை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லையே என்று மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

    இதனால் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று இரவு கங்காதரனும், அவரது மகன் ஞானமும் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    காலையில் கங்காதரன் வீடு நீண்ட நேரம் திறக்கப் படாததை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கங்காதரனின் மகள் சுமதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தந்தை கங்காதரன், சகோதரர் ஞானம் ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் உள்ள அறையில் ஞானம் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்று சிக்கியது. அதில் "எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்று எழுதப்பட்டு இருந்தது.

    எனவே கவனிக்க யாரும் இல்லாத மனவேதனையில் தந்தை, மகனும் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×