என் மலர்
உள்ளூர் செய்திகள்

யானை தந்தங்கள் பறிமுதல்
காட்டுயானைகளை கொன்று தந்தங்களை விற்க முயன்ற 8 பேர் கும்பல் கைது- 2 யானை தந்தங்கள் பறிமுதல்
ஒசூர் வனப்பகுதிகளில் வாழும் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து சென்று பெங்களுரு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தமிழக வனப்பகுதிகளில் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை மர்மநபர்கள் சிலர் பெங்களுருவில் விற்பனை செய்து வருவதாக கர்நாடகா மாநிலம் தெப்பகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அங்குள்ள பொம்மசந்திரா பகுதியில் யானை தந்தங்களை விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த 5 பேர், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ரபீக் (வயது35), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள பூதுகோட்டை கிராமத்தை சேர்ந்த மணி (35), நமிலேரி கிராமத்தை சேர்ந்த ஹரிஸ் (25), குச்சிப்பாறை கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (37), தருமபுரி மாவட்டம் நாகசேனஹள்ளியை சேர்ந்த மணிகண்டன் (33) மற்றும் தியாகராஜன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 காட்டுயானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒசூர் அருகே பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (40) மற்றும் பசவராஜ் (45) ஆகியோர் தங்களுக்கு காட்டுயானைகளின் தந்தங்களை சப்ளை செய்ததாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநில போலீசார் அவர்களை கைது செய்ய ஒசூர் வனக்கோட்ட பாதுகாவலர் கார்த்திகேயினியின் உதவியை நாடினர். பெட்டமுகிலாளம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த போலீசார் பவுன்ராஜ், பசவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதான 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒசூர் வனப்பகுதிகளில் வாழும் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து சென்று பெங்களுரு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்களா? அல்லது இவர்களுக்கு காட்டுயானைகளின் தந்தங்கள் எப்படி கிடைத்தது? தந்தங்கள் விற்பனையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என கர்நாடகா மாநில போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






