என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்கசிவு காரணமாக எரிந்து சேதமான வீடு.
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மீனவர் வீடு எரிந்து சேதம்
தொண்டி அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மீனவர் வீடு எரிந்து சேதமானது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையை சேர்ந்தவர் பால்கண்ணன்&வீரலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பால்கண்ணன் மீனவர் ஆவார்.
சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. மளமளவென எரிந்ததால் வீடு முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த துணிகள், நகை, பணம், டி.வி., பிரிட்ஜ் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களும், ஆதார், குடும்பஅட்டை உள்பட அரசு ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமானது.
தகவல்அறிந்து வீட்டுக்கு வந்த பால்கண்ணனும், மனைவியும் பதறிப்போய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். அதன்பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
பால்கண்ணனின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டதாலும், கணவன்&மனைவி வீட்டில் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






