search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்த தங்கம்-செல்வ ஜெயசிங்
    X
    தற்கொலை செய்த தங்கம்-செல்வ ஜெயசிங்

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்.ஜி.ஓ.காலனி:

    மேலகிருஷ்ணன் புதூர் சீயோன்புரத்தைச் சேர்ந்தவர் செல்வ ஜெயசிங் (வயது 68), இவரது மனைவி தங்கம் (65).

    இவர்களுக்கு சதீஷ் (35) ஏசு ஜெபின் (32) என்ற மகன்கள் உள்ளனர். செல்வ ஜெயசிங் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். மூத்த மகன் சதீசுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

    செல்வ ஜெயசிங், அவரது மனைவி தங்கம் இளைய மகன் ஏசு ஜெபின் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இளைய மகன் ஏசு ஜெபின் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர்கள் மனம் உடைந்து காணப்பட்டனர்.

    நேற்றும் ஏசு ஜெபின் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து தனது மூத்த மகன் சதீசுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் படுக்கையறையை உள்புறமாக பூட்டி கொண்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். தந்தை தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஏசு ஜெபின் வீட்டின் மாடியில் இருந்து கீழே ஓடி வந்தார். அப்போது தந்தையும், தாயும் இருந்த அறையில் இருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதையடுத்து அறையின் கதவை அவர் திறக்க முயன்றார். ஆனால் அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து உறவினர் ஒருவர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தை செல்வ ஜெயசிங், தாயார் தங்கம் இருவரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    தீயில் கருகி பிணமாக கிடந்த செல்வ ஜெயசிங், தங்கம் ஆகியோரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக அவரது இளைய மகன் ஏசு ஜெபினை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வ ஜெயசிங் கடந்த பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். எனவே மனைவி தங்கம் கணவன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×