என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    நம்பியூர் பகுதியில் 4வது நாளாக தேடுதல் வேட்டை- சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு

    கடந்த 4 நாட்களாக சிறுத்தை பீதி நிலவி வருவதால் இருகாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சிறுத்தை நுழைந்து கால்நடைகளை வேட்டையாடியது.

    இதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 4-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக இருகாலூர், நம்பியூர், மணியக்காரன் பாளையம், சிறுத்தை பதுங்கி உள்ளதாக கூறப்படும் பொன்காத்தம்மன் கோவில் குளம் உள்பட 26 இடங்களில் தானியங்களி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும் இரவு நேரங்களில் வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆனாலும் இதுவரை சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து இன்று இரவு முதல் தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணி நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த கேமராவில் சிறுத்தையை தவிர வேறு எந்த விலங்குகளும் பதிவாகாது. எனவே இதன் மூலம் கண்காணித்தால் சிறுத்தை நடமாட்டம் குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என்பதால் இந்த கேமராவை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 26 கண்காணிப்பு கேமராக்களையும் இன்று ஆய்வு செய்கின்றனர். அதில் சிறுத்தை உருவம் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர்.

    மேலும் இருகாலூர், பட்டிமணியக்காரன் பாளையம் ஆகிய 2 இடங்களில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக சிறுத்தை பீதி நிலவி வருவதால் இருகாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். பகல் நேரத்திலேயே அனைத்து வீடுகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சிறுத்தையை பிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×